World News
தெஹ்ரான்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி பாகிஸ்தான், ஈரான் நாடுகள் பரஸ்பர வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி காக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு பின்னர் ஆயுத பலமுள்ள இரண்டு அண்டை நாடுகள் அதன் எல்லைகளின் மீது நடத்தும் ராணுவத் தாக்குதல்கள் உலக அளவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.
வியாழக்கிழமை ஈரானில் உள்ள தீவிரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியிருப்பதாக ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்தது. முன்னதாக பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருந்தது.
அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தானும், ஈரானும் இப்படி மோதிக்கொள்வது இது முதல் முறையில்லை என்றாலும் ட்ரோன், ஏவுகணைகள் வீசி தாக்கிக் கொண்டதால் இந்த தாக்குதல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தரெஸ், இருநாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், "பொதுச் செயலாளர் ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான ராணுவத் தாக்குதல்களால் இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறித்து ஆழந்த கவலை கொண்டுள்ளார்" என்றார்.
Comments
Post a Comment