World News
கீவ்: கருங்கடல் பகுதியின் வாயிலாக உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ரஷ்ய அச்சுறுத்தலையும் மீறி உக்ரைன் தானிய ஏற்றுமதியை திறம்பட செய்து வருவது கவனம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த சர்வதேச உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றியும், தானியங்கள் ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் உணவுத் துறை அமைச்சர் எனப் பலரும் விரிவாக விவாதித்துள்ளனர்.
கடந்த 2021 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. ஆரம்பத்தில் கருங்கடல் பகுதியின் துறைமுகங்கள் முடக்கப்பட்டதால் உக்ரைனிலிருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.நா. சபையும் துருக்கியும் மத்தியஸ்தம் செய்தன. ரஷ்யா, உக்ரைன் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, தானியங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக உக்ரைனில் சில துறைமுகங்கள் திறக்கப்பட்டன. இவற்றின் வழியாக வெளிநாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்யப்பட்டது.
Comments
Post a Comment