World News
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை விமர்சித்து காட்டமான பதிவுகள் பறந்தன. இந்நிலையில், மின் தடை குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பவர் க்ரிட்டில் இன்று காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவினாலேயே பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளது.
ஆனால், அதற்கு முன்னதாகவே, குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை கம்பெனி உள்ளிட்ட பல்வேறு மின் பகிர்மான நிறுவனங்களும் மின் தடை பற்றி ட்விட்டரில் தகவல் தெரிவித்தன. குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை கம்பெனி தனது ட்விட்டர் பக்கத்தில் "குட்டு நகர் முதல் குவெட்டா நகர் வரையிலான இரண்டு மின் கடத்திகளில் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் பலோசிஸ்தானின் 22 மாவட்டங்களில் மின் விநியோகம் தடைபட்டது. லாகூர், கராச்சியிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் மட்டும் 117 பவர் கிரிடுகள் மின் விநியோகம் இல்லாமல் முடங்கியுள்ளது. பெஷாவர் நகரும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment